மடித்துப் போன கீற்றின்
வழியே இறங்கும்
மழைத்துளிகள்
வருசமாகியும் மாற்றப்படாத
வீட்டின் மேற்கூரை
அம்மா சொல்
உணர்த்தியும்
கவலைப்படா அப்பன்
போக்கு
அப்பனுக்கு தப்பாமல்
பிறந்த பிள்ளையின்
போக்கும் அப்பா
வழியே..
கருமேகம் பார்த்தவுடன்
குறி பார்க்கும் பிள்ளை
மழை பெய்யகூடாது
மனதில் எண்ணம்
நான் என்ன செய்ய?
அம்மாவின் திட்டலுக்கு
அப்பாவின் பதில்
பெய்த மழை
நனையாது தப்பிக்க
வீட்டினுள் புலம்பெயர்
உயிர்ப்புகளாய்..
அடித்து பெய்த
கோடை மழை
சுழன்றடித்த காற்று
கண் எதிரே
வந்து விழுந்த
மரகிளைகள்
தென்னமட்டைகள்
பிய்ந்து போன
விளம்பர பலகைகள்
அய்யோ…
எங்கள் கீற்றுவீடு

பின்னோக்கி
இழுக்கபட்ட மனது
மழை பெய்த
மாலை
வீடு திரும்பும்
பள்ளி சிறுவர்கள்
மழையில் நனைந்தப்படி
வரும் திசை
நோக்கிய கண்கள்
நான் நிற்கையில்
வாடிக்கையாய்
எனை கடந்து
செல்பவர்களின் நினைவு
வளர்ச்சியை நோக்கிய
மாற்றங்களில்
வேறு இடம் நகர்ந்து
காணாமல் போனவர்கள்
நான் நிற்கிறேன்
புதியவர்கள்
எனை கடந்து செல்கிறார்கள்.