Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Friday, May 27, 2016

தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து என்ன பயன்?- தமிழக அரசுக்கு நீதிபதிகள் 5 கட்டளை- பகிர்வு

"அடுத்த தலைமுறைக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து 'உலகத் தமிழ் மாநாடு' நடத்துவதால் என்ன பயன்?" என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழ் மொழியை அஞ்சல் வழியில் உலகம் முழுவதும் பரப்புவது தொடர்பாக 5 கட்டளைகளை பிறப்பித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ஆர்.லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ் 'செம்மொழி' அந்தஸ்து பெற்று தன்னிகரில்லாத மொழியாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டை தவிர வேறு மாநிலத்தில் தமிழ் தெரிவதில்லை. மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் ரூ.50, ரூ.200 கட்டணத்தில் இந்தி மொழியை இந்தியா முழுவதும் அஞ்சல் வழியில் போதித்து வருகிறது. அதுபோல தமிழையும் சலுகைக் கட்டணத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் கற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பினேன்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ரூ.37.36 லட்சம் நிதி ஒதுக்கீடு கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை செயலர் மற்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தமிழை வளர்க்க, உலகம் முழுவதும் பரவச் செய்ய தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு வருமாறு:
செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?
முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாம் நூற்றாண்டில் தோன்றியது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழ் பிராமி எழுத்துகள் தோன்றியதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 11 ஆயிரம் ஓலைச் சுவடிகள் தமிழ் தொன்மை வாய்ந்த செம்மொழி என்பதற்கு கூடுதல் ஆவணங்கள். தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிஜி, மியான்மர், ஆப்பிரிக்கா, மாலத் தீவுகள், அமெரிக்கா என தமிழ் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் தமிழ் மொழி பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களுக்குக் கூட தெரியவில்லை.
ஹரியாணா உள்ளிட்ட பல வட மாநிலங்களில் தமிழ்தான் இரண்டாவது அலுவல் மொழியாக கடந்த 2010 வரை இருந்துள்ளது. தமிழ் மொழியை உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் தமிழர்களுக்கும் கொண்டுசேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உள்ளது.
எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும்.
மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழ் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத் தொகை யுடன் சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளுக்கும், பிற இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்க்கவும் நிதி ஒதுக்க வேண்டும். தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பல் கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தமிழை சலுகை கட்டணத்தில் உலகம் முழுவதும் கொண்டு செல்ல கோரியுள்ள நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்து கொடுத்து, மனுதாரரின் கோரிக்கையை 12 வாரத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

நன்றி- தி இந்து

Sunday, March 03, 2013

திருமண அழைப்பிதழில் தழைக்கிறது தண்டமிழ் (பகிர்வு)


18.11.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று செங்கல்பட்டு திம்மாவரத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த அன்பர்களுக்கு நன்றி பாராட்டு அழைப்பிதழ் ஒன்றை வ.மது என்பவர் உருவாக்கி வழங்கியுள்ளார். அந்த நன்றி அழைப்பிதழில் "இணையரை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி! இத்துடன் உங்களுக்குச் சில தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தியுள்ளேன். பயின்று பயன்படுத்தி தமிழைச் தழைக்கச் செய்ய வேண்டுகிறேன்!' என்று தமிழ் தழைக்க வேண்டியுள்ளார்.
அவற்றுள் சிலவற்றைக் காண்போம்; கற்போம்; தூய தமிழ்ச் சொற்களைத் தழைத்தோங்கச் செய்வோம்.

தூய தமிழில்  -  பிறமொழியில்
மசண்டை - பிரதோஷம்
ஆரல்விழா - கிருத்திகை
முருகுபிறை - சஷ்டி
காருவா - அமாவாசை
ஐங்கூறு - பஞ்சாங்கம்
மாழைத்தடம்  -  ரயில்வே
இரவுரி  - நைட்டி
சுருளணி   - தாயத்து
நெகிழி - பிளாஸ்டிக்
நாரிழை  - ஃபைபர்
ஈகநார் - பாலித்தீன்
மகிழுந்து - கார்
சீருந்து - டேக்சி
பேருந்து - பஸ்
தானி/ உந்துசிவிகை - ஆட்டோ ரிக்ஷா
ஆவிப்பானை - குக்கர்
ஆவிமூட்டி - வெயிட்
அகவை - வயது
தூவல் - பேனா
தூலிகை - பென்சில்
அரும்புரு - ஸ்கெட்ச்
விளிம்புரு - அவுட்லைன்
தற்சுட்டுமலர் - பயோடேட்டா
படிமேடை - கேலரி
பொதியுரை - கேப்ஸ்யூல்
தண்மி - ஃபிரிட்ஜ்
எழினிப்பந்தல் - ஷாமியானா
வைகல் மனை - லாட்ஜ்
சிறப்பங்காடி - சூப்பர்
மார்க்கெட்
தொகுப்பங்காடி - பிளாசா
கொள்ளிலி - இலவசம்
சுருங்கை - சப்வே
வட்டத்திட்டு - ரவுண்டானா
வரிக்கடவு - ஜீப்ரா கிராசிங்
படிப்பேழை - அல்மைரா
வளியுருளை - கேஸ் சிலிண்டர்
வளியடுப்பு - கேஸ் ஸ்டெள

நன்றி திணமணி.

Tuesday, February 12, 2013

வெறியாட்டு


காதல் வயப்பட்ட பெண் ஒருத்தி, தன் காதலன் தன்னைப் பிரிந்து சென்ற துயரால், கனவில் புலம்பி நனவில் இளைத்தாள். அவள் உடலுக்கு வந்த நோயைக்(பசலை) கண்ட தாய், அவளுக்காகக் கடவுளை வேண்டி, ஒரு பூசாரியை அழைத்து ஆட்டை வெட்டிப் பலி கொடுக்கச் செய்தாள். இதைப் பழந்தமிழ் நூல்களில் "வெறியாட்டு' என்பர்.

இதே தலைப்பில் வடலூர் வள்ளலார் சுவாமிகள் ஒரு பாடலை எழுதியுள்ளார். அப்பாடலில், "இந்தப் பெண் தலைவனிடம் கொண்ட மோகத்தால் வருந்த, மற்றப் பெண்களும் ஊராரும் பழித்துத் தூற்ற, இந்த ஆடு, என்ன பாவம் செய்ததோ? ஏதும் செய்யாத இந்த ஆட்டை வெட்டலாமா? இதனைக் கண்டு மன்மதன் அஞ்சுவானா? (அஞ்சுமா?) இவள் துன்பம் ஆறுமா? இச்செய்தி இவளைக் காதலித்த தலைவனுக்கு எட்டுமா?' என்னும் பொருள் அமைந்துள்ளது. இப்பாடலின் இறுதி இரண்டடிகளில் "பத்தொன்பது மா' (19 மா 5+6+8=19) என்ற எழுத்துகள் வரிசையாக அமைந்துள்ளன. இப்பாட்டில் உள்ள பத்தொன்பது "மா' என்னும் எழுத்துகளை அஞ்சுமா, ஆறுமா, எட்டுமா என்று பிரித்துப் பொருள் கொள்ளுமாறு வள்ளலார் "வெறிவிலக்கு' என்ற துறையில் பாடியுள்ளார்.
இம்மையல் தையல்நைய ஏசூர மாதரும் ஆ
இம்"மை'உமை இம்மைஐயோ என்செய்த(து)-அம்மைதன்
மாமா மா மாமா, மா மாமா மா மாமா, மா
மாமா மா மாமாமா மா.
வள்ளலாரின் சொல்லாட்சித் திறத்தை இப்பாடல் எடுத்துக் காட்டுகிறது. இராமலிங்க அடிகளாரின் திருவருட்பா - தனிப் பாசுரத் தொகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

நன்றி - தினமணி

Sunday, February 03, 2013

அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள்




அரிக்கன் விளக்கு
காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
அம்மி
குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
அண்டா
அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
அடுக்குப்பானை
ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
அடிகுழாய்
கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
ஆட்டுக்கல்
வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
அங்குஸ்தான்
தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
ஓட்டியாணம்
பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
எந்திரம்
(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
உரல்
வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
உரி
(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
குஞ்சம் - குஞ்சலம்
(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
கூஜா
(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
கோகர்ணம்
(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
கொடியடுப்பு
ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
சுளகு
வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
தாவணி
(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
தொடி
பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
நடைவண்டி
(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
பஞ்சமுக வாத்தியம்
கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
பாக்குவெட்டி
(பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
பிரிமணை
(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
புல்லாக்கு
மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
முறம்
(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
லோட்டா
நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
மரப்பாச்சி
பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
தொகுப்பு: சிவமானசா

நன்றி : தினமணி

Sunday, October 24, 2010

தமிழன்

தமிழன்
புரியாத மொழி பேசுபவனைக்
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ்ப்பேசுபவனைக்
குறுகுறுவெனப்  பார்க்கிறான்

காற்றாடி,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான்
திக்கு,திங்கள்,ஆழி என்றால்
புரியாமல்
திகைக்கிறான்

உண்மைதானே!
அவனைப்பொறுத்தவரை
மம்மி டாடி
அங்கிள் ஆண்ட்டி என்று
பேசுவது கண்ணியம்
அப்பா அம்மா
அத்தை மாமா
சொற்கள் அன்னியம்!

-புதுவை ப் பிரபா-

LinkWithin

Related Posts with Thumbnails